புலர்கா லைப்பொழு தினிலே பூக்கள் விரிய
பலநிறங்கள் சூடிடவே சோலை யொருங்கும்
இளங்கதிரின் வெம்மை யஞ்சியிந்
திரன்வோட
இளங்கன்றும் தாய் மடியை எட்டிப் பிடிக்கும்
வெளிச் சத்தம் கேட்டுயிருட் போர்வை விலக்கி
வெளிச் சத்தைப் பூமகளும் வாங்கிக் கொள்வாள்
கிளிச்சத்தம் எங்கிருந்தோ காதில் கேட்க
எலிகூட எதிர்பாடி கீச்சிட் டோடும்.
சிலகதிர்கள் வேகமுடன் சீறிவரக் கண்டு
இலைநுனியை அச்சத்தோடு யிளம்பனி
பற்றும்
சிறிதாகத் தென்னங்கீற் றுதன்னிலை யசைக்க
உறக்கம்விட்டு தேரைகூடத் தன்னிலை மாறும்
கண்விழித்த குஞ்சுகுயில் கூவத்தொடங் குமதைக்
கண்டகாக்கை கோபங்கொண்டு கொத்தித் துரத்தும்
கட்டெறும்பு காலைநடை பழகத் தொடங்கும்
விட்டிடாது ஓணானும் தண்டால் எடுக்கும்.
புல்நுனியில் ஏறிவந்த பச்சைப் புழுவும்
பல்பதித்துத் தளிரிலையை உண்ணத் தொடங்கும்
விட்டுவிட்டு பூவைச்சுற் றும்வண்டு கள்கூட
சொட்டுகின்ற தேனையுண்ண பூக்களைத் தேடும்.
கிணற்று நீரில் மீனினமும் கூடிச் சிரித்து
கணக்கில்லா குட்டிகட்கு நீச்சற் பழக்கும்
கனக்கின்ற ஓட்டுடனே நத்தையும் நகரும்
கனமில்லா அணிற்பிள்ளை பற்கள் கடிக்கும்.
ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது தொடரும் .